×

சூளகிரி அருகே டயர் வெடித்ததால் தறிகெட்டு ஓடிய லாரி பஸ் மீது மோதி 4 பேர் பலி: 30 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து, நேற்று முன்தினம் இரவு 50 பயணிகளுடன் ஓசூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.  ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாமல்பள்ளம்  என்னுமிடத்தில், நேற்று அதிகாலை 3.45 மணிக்கு பஸ் வந்தபோது, எதிரே கன்டெய்னர் லாரி வேகமாக வந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக லாரியின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த  லாரி, தறிகெட்டு ஓடி பஸ்சின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் பஸ் டிரைவரான  வேடியப்பன்(40) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்  உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சூளகிரி போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர்கள் பஸ்சின் முன்பகுதியில் அமர்ந்திருந்த தர்மபுரி மாவட்டம், அரூர்  இட்லப்பட்டியைச் சேர்ந்த கண்டக்டர் சுதாகரன்(45), வேலூர் வெலக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சின்னகண்ணு(60) என்பது தெரியவந்தது. மேலும் 6 பெண்கள் உள்பட 31 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.  இவர்களுக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பெங்களூரு பனசங்கரியை சேர்ந்த சாந்தி(35) என்பவர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று மாலை இறந்தார். தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : bus crashes ,Chulagiri Truck Tire , Chulagiri, tire blast, lorry, bus, 4 people killed, 30 injured
× RELATED உளுந்தூர்பேட்டையில் பள்ளிப் பேருந்து...